மன்மத உலகம்

எவ்ளோ நாளாச்சு.. இது மாதிரி தியேட்டர்ல சுத்தமா பெண்களே இல்லாமல் ஆண்கள் மட்டும் தனித்திருக்க ஒரு தமிழ் படம் பார்த்து.. வருஷக்கணக்கா ஆச்சுங்க.. கடைசியா பரங்கிமலை ஜோதில பார்த்தது.. இன்றைக்கு மீண்டும்..

“பெண்களைப் புனிதமாகவும், தெய்வமாகவும் கொண்டாடும் இந்தத் தேசத்தில்தான் கள்ளக்காதலும், அது தொடர்பான கொலைகளும் அதிகமாக நடக்கின்றன. பாலியல் நோய்கள் மிக அதிக அளவில் தொற்றியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் நம் நாட்டில் பெண்களின் உடலை நாம் பொத்தி, பொத்தி பாதுகாத்து மறைத்து வைத்திருப்பதால்தான். அவைகள் வெளிப்படையாக இருந்துவிட்டால் நம் நாட்டில் காமத்தை அடிப்படையாகக் கொண்ட காதல்களும், காமமே முதல் என்கிற வார்த்தையும் அடிபட்டுப் போய்விடும்..” என்கிறார் வேலுபிரபாகரன்.

இதனை மையமாக வைத்தே திரைப்படம் எடுத்திருப்பதாகச் சொல்லும் வேலுபிரபாகரன் எடுத்திருப்பது என்னவோ தனது சொந்தக் கதையைத்தான்.. இதனால்தான் “காதல் அரங்கம்” என்கிற தலைப்பில் ஆரம்பிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் பெயர் சென்ஸார் சர்டிபிகேட்டில், “வேலுபிரபாகரனின் காதல் கதை” என்ற பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.



ஆனால் ஊடாக தமிழ் சினிமா ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டி காதலுக்கு இடையூறு தரும் ஜாதியையும், அதனை எதிர்த்து போராடித் தோற்கும் காதலர்களையும், வேலைக்காரனின் மனைவியை காதலியாக்கும் ஜமீன்தார்களையும், அப்பாவிப் பெண்களை ஏமாற்றும் ஆண்களையும் ஒன்று சேர்த்து ஒரு 'கூட்டுக் கலவி'யைக் கொடுத்திருக்கிறார்.

'முதலில் எழுவது காதலே அல்ல.. காமம்'தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் வேலு இதற்கு உதாரணமாக தனது சொந்த வாழ்க்கையை அப்படியே படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

சொந்தமாக ஒரு திரைப்படம் தயாரித்துவிட்டு 'ஆபாசமாக இருக்கிறது' என்கிற குற்றச்சாட்டால் அதனை திரையிட முடியாமல் தவிக்கிறார். விஷயம் கோர்ட்டுக்கு வருகிறது. 'அதிகமான ஆபாசமான காட்சிகள் உடையது அவருடைய திரைப்படம்' என்பது எதிர்த்தரப்பு வழக்கறிஞரின் வாதம். 'காமமா, காதலா..?' என்று நீதிமன்றத்தில் ஒரு நீண்ட சொற்பொழிவாற்றிவிட்டு வெளியே வருபவரை டாடா சுமோவில் வரும் ரெளடிகள் வெட்டிச் சாய்க்கிறார்கள்.

மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வேலுவின் நினைவுகளில் இருந்து திரைப்படம் விரிந்து செல்கிறது ஒரு கிராமத்திற்கு.. தன் படத்திற்கு ஷூட்டிங் லொகேஷன் பார்க்கச் செல்லும் கிராமத்தில் தான் பார்த்த ஒரு காதலர்கள் கதையைத்தான் பகுதி, பகுதியாகச் சொல்கிறார். அவரைச் சந்திக்க வந்த பத்திரிகை பெண் ரிப்போர்ட்டர் மூலமாக அவரது இந்தக் கதை போலீஸாருக்கும் தெரிய வருகிறது. நமக்கும்தான்..

வழக்கம் போல மேல் சாதி, கீழ் சாதி காதலர்களுக்குள் காதல் பிறக்கிறது. ஆனால் காதல் தீ பற்றிக் கொண்ட பிறகு இருவருக்குமிடையில் காமம்தான் தலைவிரித்தாடுகிறது.


அதே ஊரில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வந்திருக்கும் ஒரு வாத்தியாருக்கு பள்ளிப் பருவத்திலேயே குழந்தையை பெற்றுவிட்டு வாழாவெட்டியாக இருக்கும் தங்கம் என்னும் பெண் சமைத்துப் போட்டு தன் வயிற்றையும், பிள்ளையையும் காப்பாற்றி வருகிறாள். இந்த வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுப்பதைவிட, நம் 'இன' வழக்கப்படி தங்கத்தைக் கவிழ்ப்பதிலேயே குறியாக இருக்கிறான்.

காதலனின் அப்பன் ஒரு காமாந்தக்காரன். அதே சமயம் சாதி வெறி பிடித்தவனாகவும் இருக்கிறான். தங்கத்தின் அண்ணன் மனைவியை சமயம் கிடைக்குபோதெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். இங்கேயும் காமம் 'பொங்கி வழிகிறது'. தங்கத்தின் அண்ணன் தனது மனைவியின் இன்ப லீலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளாத அப்பாவி கணவனாக அதே ஜமீன்தாரிடம் வேலை பார்த்து வருகிறான்.

இந்தக் காதலர்களுக்கு தங்களது ஊர் நிலைமையைப் பற்றி நன்கு தெரிந்துபோய் “இனி நோ கல்யாணம்.. நேரா மேல போயிரலாம்..” என்று பாலிடால் டப்பாவை வாங்கி கையில் வைத்துக் கொண்டு உருகுகிறார்கள். பொண்ணோ “சாகத்தான் போறோம்.. கடைசியா என்னையவே தர்றேன்.. எடுத்துக்க..” என்று உருகிப் போய் முந்தானை விரிக்கிறாள். காமம் இங்கே 'பரதநாட்டியமே' ஆடுகிறது.

ஆளுக்கு ஒரு கவளம் சோற்றை எடுத்து வாயில் திணிக்கப் போகும்போது வேலு உள்ளே வந்து ஆட்டையைக் கலைத்து விடுகிறார். “துணிஞ்சு நில்லுங்க. சொந்தக் கால்ல நிக்குறவரைக்கும் போராடுங்க..” என்று உசுப்பிவிட்டுப் போகிறார்.



தங்கத்தை கவிழ்க்க நினைத்த வாத்தியான் கடைசியில் திட்டம் போட்டு கவிழ்த்துவிடுகிறான். “என் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சவுடனே நம்ம கல்யாணம்தான்..” என்று சொல்லிச் சொல்லியே இழுத்து, இழுத்து 'வேலை'யை முடிக்கிறான். நம்ம பய புள்ளைகளுக்கா சொல்லித் தரணும்..? இங்கே காமம் 'குச்சுப்பிடி நடனம்' ஆடியிருக்கிறது. வாத்தியார் சும்மா இல்லாமல் அனைத்துவித காமக்கலைகளையும் இந்த அப்பாவி பெண்ணிடம் போட்டுக் கொடுத்து வாங்கி அனுபவிக்கிறான்.

தங்கத்தின் அண்ணியும் ஜமீன்தாரிடம் மெழுகுவர்த்தியாய் கரைகிறாள். 'ஆஸ்தா' திரைப்படத்தைப் போல் கலைக்கண்ணாக எடுத்திருக்கும் இந்தக் காட்சியிலும் காமம் 'கதகளி' ஆடியிருக்கிறது. எவ்ளோ நேரம்தான் ஒளிஞ்சு ஒளிஞ்சு விளையாடுறது.. நோகாம நொங்கெடுக்க ஐடியா போடுகிறார் ஜமீன்தார். “உன் புருஷனை கொலை பண்ணிர்றேன்..” என்கிறார். பத்தினி தெய்வமான மனைவியோ, “நாம மாட்டிக்க மாட்டோமே..” என்கிறாள். இங்கதாங்க ஒரே கைதட்டல்.

ஊரில் தன்னை எதிர்த்து வரும் கீழ்சாதிக்கார ஒருவனை தங்கத்தின் அண்ணனிடம் மோதவிடுகிறார். சண்டையில் தோற்கும் தங்கத்தின் அண்ணனை சேரிக்கார தோழர் பெருந்தன்மையாக விட்டுவிட சோர்வுடன் வீடு திரும்புகிறான் தங்கத்தின் அண்ணன். அவன் வீட்டின் உள்ளே ஒரு ஜமீன்தாருக்கும், அவன் மனைவிக்கும் இடையே பெரிய 'காமப்போராட்டமே' நடந்து கொண்டிருக்கிறது. அரிவாளை எடுத்துக் கொண்டு மனைவியை வெட்டப் போக.. ஜமீன்தார் அவனை வெட்டி கதையை முடிக்கிறார். காமம் கண்ணை மறைத்து கொலை செய்ய வைத்துவிட்டதாம்.

வாத்தியான் திடீரென்று ஊரை விட்டுப் போக முடிவு செய்தவன் தங்கத்திடமே வந்து வசனம் பேசுகிறான். தனது அப்பாவும், அம்மாவும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதால், தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும், ஆனால் அவனுடைய மனதில் அவளுக்கென்று ஒரு தனியிடம் எப்போதும் இருக்கும் என்கிறான். தங்கம் காரித் துப்பி அவனை வழியனுப்பி வைத்துவிட்டு தான் எங்கோ போகப் போவதாகச் சொல்கிறாள். இங்கே காமம் வழிந்து உருகி எங்கோ மறைந்துவிட்டது.. பாவம்..

ஊர் நிலைமை அநியாயத்திற்கு கலவர பூமியாக.. பெண் வீட்டை விட்டு ஒரு பையோடு ஓடி வருகிறாள். காதலனோடு ஓட.. காதலனின் தந்தை ஜமீன்தார் பார்த்துவிடுகிறார். காதலர்களைத் தேடிப் பிடித்துப் பிரிக்கிறார். காதலியின் தலையை வெட்டி தன் மகனான அந்தக் காதலனின் காலடியில் வீசி “நம்ம ஜாதி என்ன? அவ ஜாதி என்ன?” என்று வீர வசனம் பேசுகிறார். பையன் பார்க்கிறான். ஆத்திரப்படுகிறான். கட்டையைத் தூக்கி அப்பன் தலைல ஒரே போடு.. “மவனே இப்ப உன் சாதியைக் கூப்பிடுறா.. காப்பாத்துதான்னு பார்ப்போம்..” என்றவன் கடப்பாரையைத் தூக்கி அப்பன் வயிற்றில் சொருகுகிறான். இங்கே காதலுக்காக இந்தக் கொலை நடந்து முடிகிறது.

முடிந்தது உருவாக்கிய திரைப்படம். இனி தொடர்வது எல்லாம் வேலுபிரபாகரனின் காதல் கதை. சில்க் ஸ்மிதாவை தாடிக்காரனிடம் இருந்து பிரித்தது.. ஸ்மிதாவை திருமணம் செய்தது.. பின்பு அவரைவிட்டு விலகியது என்று அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். இந்த ஒன்றுக்காக அவரை பாராட்டலாம்.

தனக்கு இதுவரையில் தோன்றியது எல்லாமே காமம்தான் என்றும், காதலே இல்லை என்று சாதிக்கிறார். தனக்குள் தோன்றிய காதல்களுக்கு அடிப்படை காமம்தான் என்கிறார் வேலு. இதை அவர் சொன்னவிதமும் காமமாகத்தான் இருக்கிறது.. போஸ்டர்களில்கூட அது மாதிரியான புகைப்படங்கள்தான். இதையெல்லாம் வெளிப்படையாக போட்டால்தான் காமம் பற்றிய புரிதல் மக்களுக்கு புரியும்.. தெளியும் என்கிறார்.

படத்தில் ஆரம்பத்தில் வரும் காட்சியே அதிர வைக்கிறது. நல்லவேளை எந்த பெண்ணும் தியேட்டரில் இல்லாததால் தப்பித்தது தியேட்டர்.. காதல் காட்சிகளில் சும்மா புகுந்து, புகுந்து விளையாடியிருக்கிறார் இயக்குநர். நடித்தவர்களுக்கு வாய் சுளுக்கும், கை சுளுக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். எத்தனை டேக் வாங்கி உருண்டாங்களோ தெரியலை.. நிச்சயமா உதவி இயக்குநர்கள் பாடு ரொம்பத் திண்டாட்டமா இருந்திருக்கும்.. இது போன்ற கலையுணர்வு கொண்ட காட்சிகளை இயக்க வேண்டும் எனில் ஒரு நெஞ்சுரம் வேண்டும். அது வேலுவுக்கு மட்டுமே உண்டு என்று அடித்துச் சொல்லலாம்.


சந்தடிச்சாக்கில் பெரியார் வேடத்தில் வந்து கடவுள் மறுப்புக் கொள்கையையும் விதைத்திருக்கிறார். மடத்துப் பெரியவரிடம் பேசுவது போல் பேசி “நீங்க உங்க சாதியைக் கலைங்க.. நாங்க எங்க சாதியையும் கலைச்சிர்றோம்..” என்று உடன்பாடு காண துடிக்கிறார். என்னவோ போங்க..

திரைப்படத்தின் ஆண், பெண் காட்சிகள் மட்டுமல்ல கதையம்சம் உட்பட அனைத்துமே காமமாகத்தான் இருக்கிறது.

கதையே துணுக்குச் செய்தி போல் உள்ளதால் திரைக்கதை பற்றி நாம் சொல்லவே வேண்டாம். இசை இளையராஜா என்றார்கள். பின்னணி இசை யார் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பாடலை இளையராஜா பாடியிருப்பதுபோல் தெரிகிறது. பாடல் காட்சிகளிலும்கூட காமம் தெறித்ததால் பாட்டை எவன் கவனிப்பான்..?


கதாநாயகியாகளாக நடித்தவர்களில் ஷெர்லிதாஸ் பரவாயில்லை.. மூக்கும், முழியுமாக அடுத்து ஹீரோயினாகவே நடிக்கலாம். தங்கமாக நடித்த ப்ரீத்திதான் பாவம்.. நமீதாவுக்கு தங்கச்சி மாதிரியிருந்தார். இருவரையும் கிட்டத்தட்ட துகிலுரித்துத்தான் காட்டியிருக்கிறார். நல்லவேளை.. சென்ஸார் புண்ணியத்தில் அதுவெல்லாம் லேப்பில் தூங்க.. நாம் தப்பித்தோம். அந்தப் பெண்களும் தப்பித்தார்கள்.


இவ்வளவு கதையையும் அவருடன் இருந்து கேட்டு வாங்கிச் சொல்லும் அந்த பெண் பத்திரிகையாளர் கடைசியாக “காதல் நிச்சயமா இருக்கு ஸார்.. நான் உங்களை லவ் பண்றேன்”னு சொல்லும்போது வேலு சிரிக்கின்ற சிரிப்பு அநியாயம்.. நிஜமாகவே அந்தப் பெண்ணின் காதல் உணர்வு வேலுவின் படைப்பு மீதான ஆர்வத்தையும், அவரது தொழில் திறமையையும், பழகுகின்ற தன்மையையும் வைத்து வருவதாகத்தான் தெரிகிறது. அதுவும் காமம்தான் என்று மறுப்பது காதல் என்கிற வார்த்தையையே கொச்சைப்படுத்திவிட்டது.

சொல்ல மறந்துவிட்டனே.. வேலு வெட்டப்படுவதற்கான காரணம், ஸ்மிதாவைவிட்டுவிட்டு வேறொரு டீச்சரோடு காமவயப்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டாராம் வேலு. பிற்பாடு அந்த டீச்சரும் பேக் டூ தி பெவிலியனாக வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.

இந்த நிலையில் வேலு உயிரோடு இருந்தால் எங்கே தனது கணவரிடம் போட்டுக் கொடுத்துவிடுவாரோ என்று நினைத்து அந்த முன்னாள் காதலியே அடியாள்கள் வைத்து வேலுவை கொலை செய்ய முயற்சிக்கிறாராம்.. எல்லாமே காமம்தான் என்று சொல்லி முடித்திருக்கிறார். அநியாயமா இல்லை..?

யாராவது உண்மையான காதலர்கள் கொதித்து எழலாம்.. வரும் வாரத்தில் விஜய் டிவியின் நீயா நானாவின் இப்படம் பற்றிய விவாதம் நிச்சயம் வரும்..

படத்தின் துவக்க விழாவிலேயே இத்திரைப்படத்தில் நிர்வாணக் காட்சிகள் இடம்பெறும் என்று அதிரடியாக அறிவித்திருந்ததால் இத்திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகமாயின. அதற்கேற்றாற்போல் திரைப்படம் தயாரித்து மூன்றாண்டுகள் ஆன பின்பும் சென்ஸார் சர்டிபிகேடட் தராமல் கோர்ட், கேஸ், வாய்தாக்கள், ரிவ்யூ சென்ஸார்ஷிப் என்று ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு இப்போது சென்ஸார் சொன்ன அத்தனை ‘கட்'டுகளையும் ஏற்றுக் கொண்டு கடைசியாக படத்தினை வெளியிட்டுள்ளார். "தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதிகமான சென்ஸார் 'கட்'டுகள் வாங்கியத் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.." என்கிறார்கள் திரையுலகத்தினர்.

அப்படியிருந்தும் சென்ஸார் கண்களில் இருந்து தப்பித்த சில காட்சிகளும் படத்தில் இப்போது இடம் பெற்றுள்ளன. எப்படி என்றுதான் தெரியவில்லை.

டிஸ்கி-1 - இந்தப் படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினி ஏன் நிதியுதவி செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை.

டிஸ்கி-2 - தயவு செய்து கமலா திரையரங்கிற்கு சென்று படம் பார்க்க ஆசைப்படாதீர்கள். அதற்கு திருட்டி டிவிடியிலாவது பார்த்துவிடுங்கள். பணத்தையும் கொடுத்து, மரியாதையையும் இழந்து, என்ன மயித்துக்கு அந்தத் தியேட்டருக்கு போகணும்..? கொடுமைடா சாமி..!


டிஸ்கி-3 : இத்திரைப்படத்தை கட்டாயம் பாருங்கள் என்று ஆதரவுக்கரம் நீட்டியவர்களில் சாருநிவேதிதாவும் ஒருவர். இதற்காக கோபப்பட்டு டிவிடியில்கூட பார்க்கமாட்டேன் என்று சபதமெல்லாம் எடுக்காதீர்கள்..
Posted by மன்மத உலகம் Labels: , ,

0 comments: